கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியானது. அதில், தமிழகத்தை பொறுத்தவரை 2018ல் கடைசியாக பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. இது குறித்து தங்களது மேலான கருத்துக்களை சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், நிதி ஆதாரத்தை திரட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழகத்தில் அரசு பஸ் கட்டண உயர்வு என்பது இருக்காது. என்பதால் தனியார் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றம் மக்களிடம் கருத்தை கேட்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

அரசை பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது இந்த சுமையை ஏற்றக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் டீசல் விலை உயர்ந்தபோது கூட பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

அதைபோல இன்று சர்வதேச சந்தையில் டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக். சொன்னதை விட அதிக இடங்களில் இந்தியா தாக்குதல்..! அதிர வைக்கும் பாகிஸ்தானின் ஆவணம்..!
இதையும் படிங்க: ஹப்பாடா! வர்த்தகப்போர் இனி இல்லை! பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை!