2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்து திமுக எம்.பி கனிமொழி முன்வைத்துள்ள விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் அக்கட்சி ஒரு சுதந்திரமான அரசியல் இயக்கமாகச் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக இன்று முற்றிலும் பாஜகவின் 'பி-டீம்' ஆக மாறிவிட்டது. வெளியே அதிமுக கூட்டணி என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அந்தக் கூட்டணியைத் திரை மறைவில் இருந்து இயக்குவதும், அதற்குத் தலைமை தாங்குவதும் பாஜகதான், என்று அவர் சாடினார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து மேலும் பேசிய அவர், அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கொள்கை முடிவுகள் முதல் தேர்தல் உத்திகள் வரை அனைத்தும் பாஜகவின் விருப்பப்படியே நடக்கின்றன. தமிழகத்தின் நலன்களைப் அடகு வைத்துவிட்டு, பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்துள்ள கட்சிதான் அதிமுக, என விமர்சித்தார்.
இதையும் படிங்க: நானும் ராதிகாவும் தேர்தலில் நிற்க மாட்டோம்! பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சரத்குமார் ஆதங்கம்!
திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் பயந்துபோய் மதவாத சக்திகளுடன் கைகோர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக எப்போதும் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனித்துவத்துடன் போராடும். ஆனால் அதிமுகவோ டெல்லி தலைமையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் பாஜக மேலிடத் தலைவர்களை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியது மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் பின்னணியில் கனிமொழியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!