தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், 2022 செப்டம்பர் 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது தொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல் 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த கட்டணத்தை, 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில், எது குறைவோ? அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும். அதற்கு ஏற்ப, இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண் 3.16 சதவீதமாக இருந்தது. எனவே வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த ஆணையம் முடிவு செய்தது.
இதையும் படிங்க: முதல்வருக்கு மனசாட்சி இருந்தா இத செய்யட்டும்.. ஆளும் அரசை வறுத்தெடுத்த அன்புமணி..!

மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. எனினும், ஆணையம், ஆணை வெளியிடும் போது, வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்கக்கூடாது, இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
எனவே, வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச சலுகைகள் தொடரும் என்று மின்துறை அமைச்சர் சிவசங்கர் மே 20ல் தெரிவித்தார். இதேபோல, தொழிற்சாலைகளுக்கான கட்டண உயர்வையும், அரசு ஏற்பதாக அறிவிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தினர். அதற்கு அரசு தரப்பில் பதில் இல்லை.
இந்த நிலையில், நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.

யூனிட்டிற்கு, 15 காசு முதல், 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்று, மின் வாரியத்திற்கு மானியமாக வழங்க உள்ளது. இந்த நிலையில் திமுக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டி வருவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் மின் கட்டணத்தை 26 சதவீதம் குறைக்க போவதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே 39.81 சதவீதம், மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள தி.மு.க அரசு, மேலும் 3.16 சதவீதம் உயர்த்த உள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 42.17 சதவீதம், அதாவது 45,000 கோடி ரூபாய் அளவுக்கு, மின் கட்டணத்தை தி.மு.க அரசு உயர்த்தி இருக்கிறது.

மஹாராஷ்டிராவில் மின் கட்டண குறைப்புக்கு, நிர்வாகத் திறன்தான் காரணம். ஆனால், தமிழக மின்வாரியத்தில், நிர்வாகத் திறனை பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் 62 சதவீத மின்சாரம் வெளியில் இருந்து வாங்கப்படுவதால், ஏற்படும் இழப்பை ஈடுகட்டவே, மின் கட்டணத்தை உயர்த்தி, தமிழக மக்களை திமுக அரசு வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும், முதன்மை மாநிலமாக்க போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்களை சுரண்டுவதில் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் அக்கட்சிக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பர். அடுத்து அமையும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் மின் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பச்சைத் துரோகம் செய்யும் தமிழக அரசு.. மா விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் அன்புமணி..!