ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், உலக அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. அந்த ஜலசந்தியை கடக்க முயன்ற சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்துக்குள் திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஈரான் இதை உறுதியாக நிராகரித்தது. தங்களது மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், வளைகுடா பகுதியில் உள்ள மற்ற நாடுகளின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை தாக்குவோம் என்று பதிலடி கொடுத்தது.
இதையும் படிங்க: எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!
இதற்கிடையே, டிரம்ப் அறிவித்த கெடு முடிவடையும் நேரத்தில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறி, மின் நிலையங்கள் மீதான தாக்குதலை மேலும் ஐந்து நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். எனினும், ஈரான் தரப்பில் இருந்து அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெளிவாக மறுத்தது.
அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் ஈரான் நிராகரித்துள்ளது. இருப்பினும், டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார். இந்தப் போர் சூழல் காரணமாக சர்வதேச எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், உலகின் பெரும்பகுதி எண்ணெய் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மாற்று ஏற்பாடாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனால் உலக அளவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றம் தொடரும் நிலையில், உலக நாடுகள் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மாற்று வழிகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், பொருளாதார விளைவுகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ரெடி..!! ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!!