ஜோர்டானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படை நிலைகள் மீது ஈரான் ஆதரவு அமைப்புகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அமெரிக்க மத்திய தலைமையகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த நான்கு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிறிய காயங்களுக்கு சிகிச்சை பெற்ற வீரர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரம்... 7 நாட்களாக ஓயாத தாக்குதல்.. கவலையில் உலக நாடுகள்.!
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையில், ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் திறனை குறைப்பதும், அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்குவதுமே நோக்கம் என அமெரிக்க ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு பதற்றமும் சர்வதேச எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா - ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 16 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் எந்த அளவுக்கு செல்லும் என்பது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!