மோசமான வானிலை காரணமாக அமர்நாத் மற்றும் வைஷ்ணவ தேவி கோயில்களுக்கு நடைபெற்று வந்த யாத்திரைகள் ஜூலை 19 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் இமயமலைத் தொடரில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 3.76 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை மற்றும் மோசமான வானிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, அமர்நாத் யாத்திரைக்கான பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு முக்கிய வழித்தடங்களிலும் யாத்திரையை தற்காலிகமாக நிறுத்த காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அமர்நாத் பனி லிங்கம் 90% கரைந்தது... 6 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றம்... விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன?

வானிலை சீராகி, பாதைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்பது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே யாத்திரை மீண்டும் தொடங்கப்படும் என்று காஷ்மீர் மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதுவரை பக்தர்கள் புதிய பயணங்களைத் திட்டமிட வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரையும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழை, நிலச்சரிவு மற்றும் பாதை பாதுகாப்பு தொடர்பான அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பக்தர்கள் யாரும் யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என்றும், வானிலை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது பயணத்தை ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமர்நாத் யாத்திரை இன்று துவக்கம்!! யாத்திரிகர்களுக்கு பிரதமர் மோடியின் 5 அன்பு கட்டளை!!