சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் அமைதியான முறையில் கரைப்பதற்காக, சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்பேரில் 16,500 காவல் ஆளிநர்கள் மற்றும் 2,000 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 18,500 பேர் கொண்ட பிரம்மாண்ட பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளுக்கு உட்பட்டு, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் 1,562 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
இவற்றில் ஏற்கனவே பல சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள பிரம்மாண்ட சிலைகள் அனைத்தும் இன்று அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர காவல் துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் விரிவான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

குறிப்பாக, சென்னை காவல் ஆணையரகத்திற்குட்பட்ட சீனிவாசபுரம் - பட்டினப்பாக்கம், பல்கலைநகர் - நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 முக்கிய கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் மட்டும் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறிய சிலைகளை விழா அமைப்பாளர்களே நேரடியாகக் கடலில் கரைக்கவும், ராட்சத சிலைகளைக் கடலுக்குள் கொண்டு சென்று கரைப்பதற்கு ஏதுவாக ராட்சத கிரேன்கள், பலம் வாய்ந்த சக்கர அமைப்புகள் மற்றும் இயந்திரப் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் கடற்கரைகளில் தற்காலிகக் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மற்றும் வானில் வட்டமடிக்கும் டிரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடற்கரை மணற்பரப்பில் குதிரைப்படை மற்றும் மணலில் எளிதாக ஓடும் பிரத்யேக வாகனங்கள் மூலம் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
மேலும், கடலில் அலைகளின் சீற்றத்தில் எவரேனும் எதிர்பாராதவிதமாகச் சிக்கினால் உடனடியாக மீட்பதற்காகத் தீயணைப்பு மீட்புப் படையினர், நவீன மோட்டார் படகுகளுடன் கடலோரக் காவல் படையினர் மற்றும் பயிற்சி பெற்ற உள்ளூர் மீனவ நீச்சல் வீரர்கள் களத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிகக் கட்டுப்பாட்டறைகள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அவசர மருத்துவ வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர்த்து மாற்றுப் பாதைகளில் ஊர்வலம் செல்வதோ, சட்டத்திற்குப் புறம்பாகப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதோ கண்டறியப்பட்டால் எவ்வித பாரபட்சமுமின்றிச் சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என காவல் ஆணையர் திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுகவின் முப்பெரும் விழா கோலாகல தொடக்கம்..! விருதுகள் வழங்கி கௌரவிப்பு..!!