தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆட்சியமைக்கும் பணிகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், மறுபுறம் தேர்தல் முடிவுகள் தொடர்பான சட்டப் போராட்டங்கள் நீதிமன்றத்தை எட்டியுள்ளன. குறிப்பாக, திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அவசர வழக்காக விசாரிக்கிறது.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும், திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளும், திமுக வேட்பாளர் பெரியகருப்பன் 83,364 வாக்குகளும் பெற்றனர்.
வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்கு எண்ணிக்கை கோரப்பட்டும், அது ஏற்கப்படாத நிலையில் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், தபால் வாக்குகள் மற்றும் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், எனவே முடிவை நிறுத்தி வைத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், தமிழகத்தில் நிலவும் அரசியல் முக்கியத்துவம் கருதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவெக இன்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், இந்த 1 தொகுதி முடிவின் மீதான விசாரணை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது தவெக-விற்கு 108 எம்.எல்.ஏ-க்கள் உள்ள நிலையில், ஒருவேளை இந்தத் தொகுதி முடிவில் மாற்றம் ஏற்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், தவெக-வின் முதல் வெற்றிச் சான்றிதழ் சட்டச் சிக்கலில் இருப்பது அக்கட்சியினரிடையே ஒருவிதத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் இன்று அளிக்கப்போகும் உத்தரவு, திருப்பத்தூர் தொகுதியின் தலைவிதியை மட்டுமன்றி, தமிழக அரசியல் களம் எத்தகைய சட்டப் போராட்டங்களைச் சந்திக்கப் போகிறது என்பதையும் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: ஒரே ஓட்டு தான்..!! மறுவாக்கு எண்ணிக்கை செய்யணும்..! சுப்ரீம் கோர்ட்டை நாடிய பெரிய கருப்பன்.. !